Wednesday, August 01, 2007

சுந்தர ராமசாமியைவிட நகுலன்தான் மிக முக்கியமான எழுத்தாளர்.-எம்.டி. முத்துக்குமாரசாமி

ஒரு காலகட்டத்தில் புது எழுத்து முறையில் தனித்த குரலாக அடையாளம் காணப்பட்டவர் எம்.டி. முத்துக்குமாரசாமி. இளம் வயதிலேயே மாணவ அறிவு ஜீவியாக பேசப்பட்டவர். சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அதற்கு பிற்பாடு ‘தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம்’ என்ற அமைப்பை சென்னையில் நிறுவி அதன் அறங்காவலராகவும், இயக்குநராகவும் இயங்கி வருகிறார்.‘Voicing Folklore’, ‘Folklore as discourse’, ‘இண்டியன் ஃபோக்லோர் ரிசர்ச் ஜர்னல் ஆகிய நூல்களின் ஆசிரியர்.Standford யுனிவர்சிடியின் வருகை தரும் பேராசிரியராகவும் இருக்கிறார். தீராநதிக்காக அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சந்தித்தோம்.
தீராநதி: பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் உங்களின் இயக்கம் தமிழிலக்கியப் பரப்பில் படு தீவிரமாக இருந்திருக்கிறது. அன்றைய அறிவு ஜீவிகளின் மத்தியில் ஒரு சலசலப்பை உங்களின் எழுத்துக்கள் உண்டாக்கி இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பல சிறுகதைகளையும், கட்டுரைகளையும், ஏன் நாடகங்களையும் கூட நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். அப்படி இருந்தும் அவற்றை புத்தகமாக்கும் முயற்சியை நீங்கள் செய்யவே இல்லை. உதிரி உதிரியாகத் தேடித் தேடி படிக்கக் கூடியவையாகத்தான் அவை இருக்கின்றன. ஆகையால் உங்களின் இயக்கத்தை கோர்வையாகப் புரிந்து கொள்ள, உங்கள் தொடக்க காலத்திலிருந்து பேச ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பேசுவோமா?

எம்.டி.முத்துக்குமாரசாமி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1980_முதல் 1985_ல் நான் மாணவனாக ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர்களான ரமேஷ்குமார், செந்தில்குமார், மனோகர் எல்லோருமாகச் சேர்ந்து ‘ராகம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் பத்திரிகையைத் திடீரென்று அச்சில் கொண்டு வரலாம் என்று முடிவு செய்து, அதற்காக வேண்டி ‘ஏதாவது நீங்கள் எழுதித் தர முடியுமா?’ என்று என்னிடம் கேட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு நான் ஒரு சிறுகதை எழுதிக் கொடுத்தேன். அந்தச் சிறுகதை வெளிவந்த காலத்தில் கல்லூரி வளாகங்கள் எல்லாமே ரொம்பவும் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டம். தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி வட்டாரங்கள், பெரிய அதிர்வலைகளை எழுப்பக்கூடிய அறிவுஜீவிகள் நடமாடும் இடங்களாக, பலவிதமான சிந்தனைகளை எக்ஸிஸ்டென்ஷியலிசம் முக்கியமாக விவாதிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. ‘போஸ்ட் எமர்ஜென்ஸி பீரியட்’ என்பதால் எல்லோருமே நிறைய பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்தார்கள். சார்த்தரைப் பற்றி, ஆல்பெர் காம்யூ பற்றியெல்லாம் படித்து விவாதிப்பது என்பது கல்லூரி வட்டாரத்தில் வழக்கமான ஒன்றாக இருந்தது. அதைப் பேசி விவாதிப்பதற்கென்றே குழுக்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் நானும் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி அதிகமாகப் படித்துக்கொண்டிருந்ததால், ஒரு மாணவ அறிவுஜீவியாக கல்லூரி வட்டாரத்திற்குள் அறியப்பட்டதனால் அன்றைய பெரும் அறிவுஜீவிகளுடன் சகஜமாகப் பேசி விவாதிக்கக் கூடிய ஓர் உறவு எனக்கு ஏற்பட்டது.
ரமேஷ்குமாருக்கு காமெடி நன்றாக எழுதவரும், செந்தில்குமார் நிறைய கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். என் வகுப்புத் தோழனான ஃபிரான்ஸிஸ் மனோகர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களைப் படிப்பதில் படுதீவிரமான நபராக இருந்தார். மனோகர் மூலமாகத்தான் எனக்கு மற்ற இருவரின் நட்பும் அறிமுகமானது. இவர்களுடன் சேர்ந்து இயங்குவதில் எனக்கு உவப்பு ஏற்பட்டதனால் சேர்ந்து இயங்கலானேன். சிறுகதையோடு ஒரு புத்தகத்திற்கு விமர்சனமும் எழுதும்படி கேட்டார்கள். அன்றைய காலத்தில் ‘அன்னம் புக்ஸ்’ பல இடங்களில் தன் புத்தகக் கிளைகளை வைத்திருந்தது. திருச்சியில் உள்ள அன்னம் புக்ஸிலிருந்து ‘‘ஜே.ஜே. சில குறிப்புகள்.’’ புத்தகத்தை நண்பர்கள் வாங்கி வந்து தர, அதற்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதினேன். அப்போது எனக்கு என்ன தெரியாதென்றால், சிறு பத்திரிகை என்று ஒரு வட்டம் இருக்கிறது. அதில் பல முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிய எவ்விதமான அறிமுகமும் இல்லாமல் இருந்தது.
என்னுடைய எம்.ஏ.வுக்கான தீஸிஸ்ஸாக ஜேம்ஸ் ஜாய்ஸினுடைய ‘யுலிஸஸ்’ நாவலை எடுத்துக் கொண்டிருந்தேன். ஜேம்ஸ் ஜாய்ஸைப் படிப்பது எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அப்போது என் மனநிலை நனவோடை எழுத்து ரைடிங், எக்ஸிஸ்டென்ஷியலிஸம் இந்த இரண்டினாலும் கவரப்பட்டிருந்தது. அந்த மனோ நிலைக்கு ஏற்ப ஒரு கதையை நான் தமிழில் எழுத வேண்டுமென நினைத்தேன். அதே தன்மையுடன் கூடிய கதை ஒன்றை எழுதினேன். ஜேம்ஸ் ஜாய்ஸ் எனக்கு ஆதர்சமான எழுத்தாளராக இருந்த அதே வேளையில் ஸில்வியா பிளாத்தின் மீதும், அவருடைய மரணம், அவருடைய வாழ்க்கை, அவருடைய கவிதைகள் மீதும் பெரிய ஈடுபாடும் எனக்கு இருந்தது. ‘ஸில்வியா பிளாத்’ நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார். ‘பெல்ஜார்’ என்ற ஒரு நாவலைக் கூட எழுதி இருக்கிறார். ரொம்பவும் சென்சிட்டிவ்வான கவித்துவ மனநிலை அவருடையது. இப்படி நிறைய எழுதிக் கொண்டிருந்தாலும், திடீரென்று எழுத முடியாத சூழ்நிலையில் அது எப்படி ஒரு திருப்பமானதாக மாறி அவருடைய வாழ்க்கையை எப்படி துயரமான முடிவுக்கு இட்டுச் சென்றது என்பதை யோசிக்கும் போது, ஸில்வியா பிளாத்தின் மேல் எனக்கு அபூர்வமான பிரியம் ஏற்பட்டது. அந்த பிரியத்தை எப்படி என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘எழுதுவதால் உயிர் வாழ்கிறேன் என்பதோடு எழுதமுடியாமல் போகும்போது உயிரே போய் விடுகிறது’ என்கிற தன்னிலை, ஸில்வியா பிளாத்திடம் இருப்பதை நான் உணர்ந்தேன்.

எனக்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் போல பக்கம் பக்கமாக எழுதக் கூடிய (யுலிஸஸ் நாவல் கூட 600 பக்கங்கள்) ஓர் ஆளுமையின் மீது ஈர்ப்பு இருந்த அதே சமயத்தில் ஸில்வியா பிளாத் மாதிரியான ஒருவர் எப்படி எழுத முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் என்ற மனோநிலையின் மீதும் பற்று இருந்த காரணத்தினால் என்னுடைய புனைபெயரை ‘ஸில்வியா’ என்று வைத்துக் கொண்டேன். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், பாப்புலரான பல ஆண் எழுத்தாளர்கள் பெண் பெயரில் எழுதுவதென்பது வழக்கமான ஒன்றாக இருந்ததனால் என்னவோ நானும் அப்படி ஒரு பெண் பெயரை வைத்துக் கொண்டேன் என்று நினைத்தார்கள்.
அன்றைக்கு நான் ஏதோ ஒரு சாதாரணமான கதையைத்தான் எழுதினேன் என்றாலும் கூட, அதற்குப் பின்னணியில் இருந்த ஒரு நல்ல வலுவான காரணமும் ஒரு வலுவான சூழ்நிலையும் என்னுடைய கதைக்கான மனோநிலையைக் கட்டமைக்கக் கூடியதாக இருந்ததனால் நான் எழுதின கதை ரொம்பவும் பாப்புலராகிவிட்டது. கதை மட்டுமல்ல; கதை வெளிவந்த ‘ராகம்’ பத்திரிகையும் மாணவர்கள் மற்றும் சிறு பத்திரிகைகள் மத்தியில் பாப்புலராகி விட்டது.

திருச்சியில் அப்போது எஸ். ஆல்பர்ட்டும் இருந்த காரணத்தினால் அங்கு சிறுபத்திரிகை சார்ந்த பலரும் அவருடன் கூடுவது, சிறுபத்திரிகை இலக்கியங்களை விவாதிப்பது, என்பது ஒரு இயல்பான காரியமாக எங்களுக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது. இன்னும் குறிப்பாகச் சொன்னால், எனக்குத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை என் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதே வேளையில்தான் எங்கள் கல்லூரிக்கு முன்னால் விஜயகுமார் என்பவர் ஒரு புத்தகக் கடை வைத்திருந்தார். அவருக்கும் எஸ். ஆல்பர்ட்டுடன் ஒரு நெருங்கின தொடர்பு இருந்தது. இப்படியெல்லாம் சிறு பத்திரிகை இலக்கியத்தை விவாதிப்பதற்கு ஓரிடம் இருக்கிறது என்பது முதல் இதழ் ‘ராகம்’ வெளிவந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. அவர்களின் தொடர்பு கிடைத்த பிறகு ராகத்தின் முதல் இதழை எல்லா சிறு பத்திரிகை எழுத்தாளர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தோம்.

அவர்கள் எல்லோருமே ரொம்ப பாஸிடிவ்வாக ரெஸ்பான்ஸ் பண்ணினார்கள். இப்படி தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் மொத்தம் ஆறு இதழ்களைக் கொண்டு வந்தோம். அந்த ஆறு இதழ்களிலும் நான் ஆறு கதைகள் எழுதினேன். சில விமர்சனங்கள் எழுதினேன். சில மொழி பெயர்ப்புகளையும் பண்ணினேன். இந்த ஒரு வருட காலத்திற்குள் எங்களுக்கு சிறு பத்திரிகையினுடைய அத்தனை பரிமாணங்களும் முழுமையாகத் தெரிய வந்துவிட்டன.

இந்த நேரத்தில்தான் ஆத்மாநாமின் மரணம் நிகழ்ந்தது. ஆத்மாநாமின் மரணத்தைப் பற்றி கார்த்திகா ராஜ்குமார், பிரம்மராஜன் போன்றவர்கள் ராகத்திற்கு கட்டுரை எழுதி அனுப்பினார்கள். ஒரு பதற்றமான மனோ நிலையை ஸில்வியா பிளாத்திடமிருந்து என் எழுத்துக்கானதாக நான் வரித்துக் கொண்டது, ஆத்மாநாமின் மரணம் ஏற்படுத்திய பதற்றம் எல்லாவற்றையும் சேர்த்து என் படைப்பு மனோநிலையாக அன்று நான் அடையாளம் கண்டுகொண்டேன். ‘ராகம்’ முடிந்த பின்பும் இந்தக் கதைகளுடைய தன்மையைப் பற்றி தொடர்ந்து விவாதித்தது, எழுதியது எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது ஒரு முழுமையாக சிதறுண்ட பிளவுபட்ட ஒரு மனோநிலையாக என்னுடைய படைப்பின் ஆதார மையம் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. சிதறுண்ட மனோநிலையே 85 முதல் 95 வரை இருந்த தமிழ்நாட்டின் வரலாற்று காலகட்டத்தின் பிரதிபலிப்பு என்பது என்னுடைய இப்போதைய அனுமானம்.

என்னுடைய படைப்புகளில் வடிவங்களின் மீதுதான் நான் ஆர்வமானவனாக இருந்தேன். தொடர்ந்து சிறுகதை வடிவங்களை எப்படி முழுமையாக மாற்றுவது, ஒரு பதற்றத்திற்கு ஆளான, அமைதியற்ற, பிளவுபட்ட, ஒரு இலக்கற்ற ஓரிடத்திலிருந்து அதை படைப்பின் ஆதார மையமாக வைத்து நீங்கள் என்ன மாதிரியான படைப்பைப் படைப்பீர்கள் என்று பார்க்கும் போது, நேர்கோட்டில் கதை சொல்வது என்பது எனக்கு சாத்தியமற்றுப் போனது. அதையே என்னுடைய பலமாகவும்கருதுகிறேன். ‘நான்_லீனியர் ரைடிங்’தான்,. என்னால் எழுத முடியும் என்பதும் தெரியவந்தது. அப்போது தொடர்ந்து இலக்கிய உலகமும் சரி, அரசியல் உலகமும் சரி சுத்தமாக வாழ்வதற்கான லட்சியமேயற்ற எதிலும் அபிப்பிராயமேயற்ற மனோ நிலையில்தான் இருந்தது. நானும் அவ்வாறே இருந்தேன். இதை நம்பிக்கையற்ற வெளி என்று நான் சொல்லமாட்டேன். நம்பிக்கையோடு கூடிய ஆனால், அதே சமயத்தில் ஒரு பதற்றமான நிலையில் இருக்கக்கூடிய, மனோநிலையின் வடிவம் என்ன என்பதை ஒவ்வொரு கதையிலும் செய்து பார்த்திருக்கிறேன். நான் ஒவ்வொரு கதையையும் வேறுவேறு வடிவத்தில்தான் எழுதி இருக்கிறேன். ஒரே வடிவத்தில் இதுவரை நான் இரண்டு கதைகளை எழுதியதில்லை.

இதை பிரக்ஞை பூர்வமாக நடக்கின்ற செயல்பாடு என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான் கதை எழுதும்போது திருப்பி திருத்தித் திருத்தி எழுதினதே கிடையாது. ஒரு தடவை என்ன எழுதினேனோ அதேதான். இதனால் பல நேரங்களில் சும்மா இருப்பதேதான் என்னுடைய படைப்பியக்கமே தவிர, நிறைய எழுதுவதில் இல்லை.
மனதிற்குள் ஒரு கதையின் முழு வடிவமும் சிதறலாகவே சேர்ந்திருப்பதை அதை அப்படியே எழுதி விடுவது என் நடைமுறையாக இருந்திருக்கிறது. இதனால் என்ன ஆனதென்றால், ஆசைப்பட்ட அளவுக்கு எழுத முடிவதில்லை. படிக்கின்ற அளவுக்கு எழுதுவதில்லை. இந்த நிலைகள்தான் என்னிடம் தொடர்ந்து இருக்கின்றன.
நான் 85_ல் என்னுடைய பிஹெச்டிக்காக சென்னைக்கு வந்தேன். பிஹெச்டி பண்ணிக் கொண்டிருந்த காலத்தில்தான் என்னுடைய நண்பர்கள் வட்டம் விரிவடைந்தது. எஸ்.வி. ராஜதுரை அறிமுகமானார். என்னுடைய இருபத்தொரு வயதில் எஸ்.வி. ராஜதுரை பெரியதொரு பிரமாண்டமான பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் சிந்தனையாளராக, படைப்பாளியாக அவர் இருந்தார்.
நான் மட்டுமல்ல, என்னுடைய நண்பர்கள் பலர் இப்போது ஃபிலிம் டைரக்டராக இருக்கக் கூடிய ஜேடி_ஜெர்ரி, அதுக்கப்புறம் இன்னும் சிலர். எல்லோருமே அவரின் படிப்பறிவைப் பற்றி, அவருக்கு இருக்கும் அறிவாற்றலைப் பற்றி பெரிய பிரமிப்பில் இருந்தோம். ஏற்கெனவே சிறுபத்திரிகையில் கதைகள் எழுதி அதன் மூலமான ஒரு சிறு அறிமுகம் இருந்ததனால் அவரிடமான பழக்கம் இயல்பாக ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் பேசுவது, விவாதிப்பது என்பது நடந்து கொண்டிருந்தது. இதே சமயத்தில் நான் பகுதி நேரத்தில் ஒரு எம்.ஏ. தத்துவ பாடத்தையும் படித்து வைத்துக் கொண்டேன். பிஹெச்டிக்காக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஸ்டக்சுரலிஸம், போஸ்ட் ஸ்டக்சுரலிஸம் மீதெல்லாம் பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. அதே நேரம் தமிழவன் தெரியவந்தார். நாகார்ஜூனன் தெரிய வந்தார். வெங்கடேஷ் சக்ரவர்த்தி தெரியவந்தார். ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், ந. முத்துசாமி என்று பெரிய பட்டியலே போடும் அளவிற்கு ஆட்கள் தெரிய வந்தார்கள். என்னுடைய வாழ்க்கையில், சிந்தனையில், எழுத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் ந. முத்துசாமிதான்.

அவர் நவீன நாடகங்கள் போடுவது, சென்னைவாசிகளை அழைத்துக்கொண்டு போய் தெருக்கூத்தைக் காட்டுவது என்று செயல்பட்டுக் கொண்டிருந்தார். முத்துசாமியின் நாடகத்தின் மீது எனக்கு ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. 1986_ல் என்னை ஓரிரவில் புரிசைக்கு அழைத்துக் கொண்டு போய் கண்ணப்பத் தம்பிரானின் மகாபாரதத் தெருக் கூத்தைக் காண்பித்தார். நான் தென் மாவட்டத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால், எனக்கு வட மாவட்டங்களின் மரபான தெருக் கூத்து பற்றி எதுவும் தெரிந்திருக்கவே இல்லை. இவ்வளவு பிரமாதமான தியேட்டர் தமிழ்நாட்டில் இருப்பது தெரியாமலேயே இருபத்தியோரு வயதுவரை இருந்திருக்கிறோமே என்று வருந்தினேன். கூத்து எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நாம் இதையெல்லாவற்றையும் விட்டு விட்டு தமிழ் சினிமாவைப் போய் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோமே என்று உறுத்த, நம்முடைய ஆய்வை மாற்றிக் கொள்ளலாமே என்று ஆய்வை மாற்றிக் கொண்டேன். அந்த மாற்றத்திற்குக் காரணம் ந. முத்துசாமிதான். அவர் அன்று மாற்றி விட்டதால்தான் இன்று வரை நாட்டுப்புறவியல் துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
நவீன எழுத்தாளர்கள், பின் நவீன எழுத்தாளர்கள் எல்லோருமே நாட்டுப்புறக் கலைகளில் இருந்துதான் தங்களுடைய போஸ்ட் மார்டனிஸ்ட் மொழியை உருவாக்குகிறார்கள். மிலோரட் பாலிக்கின் எழுத்துக்களில் செர்பிய நாட்டுப்புற கதைகளும், புராணங்களும் மறு உருவாக்கம் பெறுகின்றன என்றால், மார்க்குவெஸ்ஸின் படைப்புகளில் கொலம்பிய நாடோடிக் கதைகளும், பாடல்களும் புது வடிவம் பெறுகின்றன.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் போலவே தாமஸ்பிஞ்ச்சன் அறுபதுகளின் எதிர்ப்பியக்க யீஷீறீளீறீஷீக்ஷீமீ_யே தன்னுடைய போஸ்ட்மாடர்ன் எழுத்தாக முன்வைக்கிறார். பார்த்தல்மே ‘ஷிஸீஷீஷ் ஷ்லீவீtமீ’ கதையை குறுநாவலாக எழுதியிருக்கிறார்.

இது தவிர போஸ்ட்மாடர்னிஸ சிந்தனையாளர்கள் கலைகளை உயர்ந்த கலை, தாழ்ந்த கலை என்றெல்லாம் வகைப்படுத்துவதில்லை. இலக்கியம் என்பது ஒருவகை மொழி விளையாட்டு; அறிவு சார்ந்த உரையாடல்களில் வெளிப்படுகின்றன உண்மைகள். இவை வாசிப்பின் காலகட்டத்தினாலும், வாசக கருத்தியலிலாலும் உருவாக்கப்படுகின்றனவே அன்றி எழுத்தாளனால் அல்ல.

அதனால்தான் என்னுடைய படைப்புகளில் உயரிய லட்சியங்களின் கருத்தாக்கம் இருக்கின்ற போதே அதன் கூடவே ஒரு கீழ்த்தரமான விஷயமும் ஒத்த நேரத்தில் கூடவே இருக்கும். இப்படி பல புள்ளிகள் இணைகின்ற சிந்தனைகள் எனக்குக் கிடைத்தன. இவற்றி லிருந்துதான் எனக்கான இலக்கியத்திற்கான ஜினியாலஜியை நான் வகுத்துக் கொண்டேன்.
அந்த லிட்ரரி ஜினியாலஜி என்பது உலகளாவிய ஜினியாலஜியாகவும் வெறுமனே தமிழில் எழுதக் கூடி படைப்புகளைப் பற்றியதாக மட்டுமே இல்லாமல் இருப்பதாகவும், அதே சமயத்தில் யீஷீறீளீறீஷீக்ஷீமீ பற்றி ஓர் ஆய்வு சம்பந்தமாக இருப்பதாகவும் அமைகிறது.

வில்லியம் ஃபாக்னர், காஃப்கா, மார்க்குவெஸ், பாவிக், போர்ஹே, பார்த்தல்மே, கோர்த்தசார் என பலரை வரித்துகொண்டேன் என்று சொல்லலாம். நம்முடைய யீஷீறீளீறீஷீக்ஷீமீ சேர்ந்து இவர்களின் படைப்புக்களுடன் உருவாகிற ஜினியாலேஜிதான் என்னுடைய லிட்ரரி ஜினியாலேஜி, மரபு. ஆனால், இது பிரக்ஞை பூர்வமான ஒரு பயிற்சியாகவும் இருந்ததில்லை.
இதன் தொடர்ச்சியான காலத்தில்தான் 23_24 வயதிலேயே சேவியர் காலேஜில் நாட்டுப்புறவியல் துறையில் துணைப் பேராசிரியராக வேலையில் சேர்ந்தேன்.

தீராநதி: இந்தக் காலகட்டத்தில் லூர்து அத்துறையின் தலைவராக இருந்தார் அல்லவா?

எம்.டி.முத்துகுமாரசாமி: ஆமாம் லூர்துதான் துறைத் தலைவராக இருந்தார். தமிழவன், நான், சிவ சுப்ரமணியன் (சிவசு) எல்லோரும் சேர்ந்து இயங்கி வந்தோம். ஸ்டரக்சுரலிஸம் பற்றி ‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’ என்ற சிறு அறிமுக புத்தகத்தை நான் எழுதி வெளியிட்டேன்.

தீராநதி: எது எழுநூறு பக்கத்திற்கு எழுதி வைத்திருந்ததாக நீங்கள் சொல்லி இருந்தீர்களே அந்தப் புத்தகமா?

எம்.டி.முத்துகுமாரசாமி: எழுநூறு பக்கங்களும் என்னிடம் குறிப்புகளாகத்தான் இருந்ததே ஒழிய ஒரு முழுமையான புத்தகமாக அது இல்லை. வெவ்வேறு வடிவங்களில் ஓர் ஆராய்ச்சி மாணவனாக குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன் அவ்வளவுதான். அது ஒரு கல்லூரி வட்டத்திற்குள் வெளியிடப்பட்ட சிறு புத்தகம் என்றாலும் கூட, லூர்துவுக்கு இருந்த தொடர்புகளாலும், எனக்கு சிறு பத்திரிகைகளுடன் இருந்த தொடர்புகளாலும், பரவலாக கவனத்தை அப்புத்தகம் பெற்றது. இதே சமயத்தில்தான் ‘மேலும்’ பத்திரிகையை ஆரம்பித்தோம். தமிழவன், நாகார்ஜுனன், சிவசு, சாருநிவேதிதா இவர்களுடன் ஒரு தொடர்பும், நட்பும் எனக்குக் கிடைத்தது.

நவீன இலக்கியம், பரிச்சயம் மட்டுமே நமக்குப் போதாது தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களுடன் ஒரு வாசிப்புத் தேவை என்ற கருத்து அன்றைக்கு ஸ்டரச்சுரலிஸம் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டிருந்த தமிழவன், ஞானி, விக்கிரமாதித்யன் போன்றவர்களால் முன் வைக்கப்பட்டு அக் கருத்துக்கள் மேலெழவே, நான் பழந்தமிழ் இலக்கியங்களை படு தீவிரமாக மூன்று நான்கு வருடங்களாகத் தொடர்ந்து வாசித்தேன். சங்க இலக்கியத்தைப் படித்தது, தொல்காப்பியத்தைப் படித்தது. தொடர்ந்து மேலும் இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். தமிழின் உரைமரபுகள் மேல் எனக்கு இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து ஒரு பெரிய ஈடுபாடு இருந்து வருகின்றது. 85_லிருந்து 95 வரையிலான என் இலக்கிய இயக்கத்தை, இன்றைக்கு திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு மாணவப் பருவத்தின் செயல்பாடுகளாகத்தான் இருக்கின்றதே ஒழிய_ ஒரு முழுமையான எழுத்தாளனாக அன்றைக்கு நான் உருவாகிவிட்டிருந்தேன் என்று சொல்லமுடியாது.

தீராநதி: நீங்கள் சிலாகித்துச் சொல்லும் ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸஸ்’ நாவலில் வரும் இரு நாயகர்கள் லியோப் பல்ட் புளும், ஸ்டீபன் டிடாலஸ்ஸ§ம் ஆவர். புளும் ஒரு யூதன். அவனது மனிதார்த்தத்தை ஜாய்ஸ் சித்தரிப்பதுடன் டிடாலஸ் மூலம் யூத எதிர்ப்பாளர்களை வெறி பிடித்த சநாதனிகளாக ஜாய்ஸ் தன் நாவலில் சித்திரித்திருந்தார். ‘யுலிஸஸ்’ஸை ஜாய்ஸ் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் வறுமை அவரை எழுத விடாமல் பெரும்பாரமாய் அழுத்திக் கொண்டிருந்தது.
அதை உணர்ந்த எஸ்ரா பவுண்ட் ஜாய்ஸ§க்கு பண உதவி செய்ய முன்வந்தார். பவுண்ட் ஒரு யூத எதிர்ப்பாளர். நாவலில் வரும் கதாபாத்திரம் யூத எதிர்ப்பாளர்களை சநாதனிகளாக சித்திரிக்கிறது என்று முன் கூட்டியே அறிந்திருந்தும் பண உதவியைச் செய்தார் பவுண்ட். ஆக, இதிலிருந்து எஸ்ரா பவுண்ட் இலக்கியம் வேறு, அரசியல் கருத்தாக்கம் வேறு என்ற கருத்தியலில் செயல்பட்டிருப்பது புரிகிறது. ஆனால், நம் தமிழ் நாட்டிலோ எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் அரசியலாக்குகிறார்கள். அல்லது எந்த அரசியலையும் இலக்கியமாக சித்திரித்து தூக்கிப் பிடிக்கிறார்கள், இது ஏன்?

எம்.டி.முத்துக்குமாரசாமி: ஜாய்ஸின் படைப்பு இருக்கிறதே, அது பல பரிமாணங்கள் உடையது. ஒரு இலக்கியம் என்பது பெரும்பாலாக பல பரிமாணங்கள் உடையதாக இருக்கும் போது, ஒரு சிறிய அரசியல் நோக்கத்திற்குள் அதைக் குறுக்க முடியாது. எஸ்ரா பவுண்ட் யூத எதிர்ப்பாளராக இருந்தாரா என்பதிலேயே நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. இதையும் மீறி ஒரு படைப்பு என்பது காலம் காலமாக வெவ்வேறு விதமான மந்திரங்களையும், மாயங்களையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஒவ்வொரு கால கட்டத்திற்கும் வெவ்வேறு விதமான அர்த்தங்களைத் தரக்கூடியதாக அது இருக்கிறது. அது ஒரு பெரிய படைப்பினுடைய காரியம்.
அந்தப் பெரிய படைப்பைப் பண்ணுகின்ற, ஆள் சாதாரணமான சிறுபிள்ளைத்தனங்களுக்கு ஆட்பட்ட சாதாரணமான மனிதனாகவே இருக்கிறான் என்பதுதான் உண்மை.

அவனது படைப்பு அவனையும் மீறி பெரியதொரு இடத்திற்குப் போய்விடுகிறது. இது ஜாய்ஸ§க்கும், எஸ்ரா பவுண்டிற்கும் ஏன் எல்லோருக்குமே பொருந்தும் ஒரு விஷயம்தான். அரசியல் ரீதியாக ஒரு tமீஜ்t வாசிப்பதற்குண்டான ஏராளமான காரணங்கள், அதற்கான நியாயங்களும் இருந்தாலும் கூட, அது காலம் காலமாக வெவ்வேறு விதமான செய்திகளையும்தான் தருகிறது என்கின்ற வகையில்தான் இலக்கியத்தை நாம் அணுகவேண்டும்.

தீராநதி : என்னுடைய கேள்வியின் மையமே தரமான படைப்பாக ஒன்றிருக்கும் பட்சத்தில், அதை அரசியல் காரணங்களைக் காட்டி புறக்கணித்து விடுகிறார்கள். ஒரு சந்ததிக்கான வாசிப்பையே தடுத்துவிடுகிறார்கள். ஜாய்ஸின் ‘யுலிஸஸ்’ நாவலை பவுண்ட் நினைத்திருந்தால் அரசியல் காரணங்களைக் காட்டி நிராகரித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. நம்முடைய இலக்கியச் சூழலில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றேன்?

எம்.டி.முத்துகுமாரசாமி: குறிப்பிட்டு அப்படி ஏதாவது ஒன்றை நீங்கள் சொல்ல முடியுமா?

தீராநதி: நிறைய குறிப்பிடலாம். திராவிட அரசியல் பக்தி இலக்கியத்தை பல காரணங்களைக் காட்டி நிராகரித்து. விமர்சித்தது. விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன். ஒரு சந்ததியினருக்கு அந்த அறிவு போய்ச் சேராமலே போக ஒரு தடை ஏற்பட்டது. அவ்வாறு ஒரு வாசிப்பை மறைமுகமாகத் தடை செய்வதென்பது பெரிய கொடுமை என்று கருதுகிறேன். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எம்.டி.முத்துகுமாரசாமி: அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நீங்கள் சொல்லும் கருத்து உண்மையானதும் கூட. அரசியல் ரீதியான காரணங்களால் ஓர் இலக்கிய வாசிப்பை ஒதுக்கி வைப்பது ரொம்ப ரொம்பத் தவறான காரியம் என்றே நினைக்கிறேன். அதே சமயத்தில் அது மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நீங்கள் எந்த அரசியலின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அந்த அரசியலைச் சார்ந்து இலக்கியத்தை வாசிக்கலாம். ஆனால், அரசியலைச் சார்ந்து நீங்கள் என்ன செய்யக்கூடாது என்றால், இலக்கியத்தை நிராகரிக்கக் கூடாது. நாங்கள் பக்தி இலக்கியங்களை, சங்க இலக்கியங்களை வாசித்தபோது அதை ஒருவிதமான அரசியல் தன்மை யோடுதான் வாசித்தோம் அவற்றை நாங்கள் நிராகரிக்கவில்லை.

திராவிட அரசியல் பொதுத் தளத்தில் வேண்டுமென்றால், பக்தி இலக்கியத்தைத் தடை செய்திருக்கலாம். திருநாவுக்கரசரையோ ஆண்டாளின் பாசுரங்களையோ எப்படி நாம் இலக்கியமாக அணுகுவது என்பதை நமது கல்வி முறைகளே நமக்குக் கற்றுத்தர தவறி விட்டன. கல்விக்கூடங்களில் வெறும் செய்யுளாகத்தான் இவை படிக்கப்படுகின்றன. இலக்கியமாகப் பயிற்றுவிக்கப்படுவதில்லை. சுதந்திர இந்தியாவில் அல்லது பிரிட்டீஷ் இந்தியாவில் 200, 250 வருடங்களாக ஓர் இலக்கியத்தை அணுகுவதற்கான முறைகள் என்ன என்பது நம்மிடம் வளர்ச்சியடையாமலே போய் விட்டன. இதற்கெல்லாம் வெறுமனே அரசியல் மட்டுமே காரணமாக இருக்கிறது என்று நான் சொல்லமாட்டேன்.

தீராநதி: ‘மெக்கலே’ கல்வித் திட்டத்தையோ, இந்திய அரசின் இன்றைய கல்வித் திட்டத்தையோ அரசியல் சக்திகள்தான் தீர்மானிக்கின்றன. அப்புறம் எப்படி அரசியல் மட்டுமே காரணம் என்று நான் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்? அரசின் குரலாகத்தானே நாம் நமது கல்வியைப் பயில்கின்றோம்?

எம்.டி.முத்துக்குமாரசாமி: அரசியலுக்கும் அப்பாற்பட்டு வாசிக்க முடியாது என்பதுதான் உண்மை. எந்த ஒரு சரித்திரக் கால கட்டத்திலும் நீங்கள் சார்ந்திருக்கும் அரசியலோ, அல்லது நினைவிலியாக பதிவாகி இருக்கக்கூடிய அரசியலையோ சார்ந்துதான் வாசிப்பு என்பது சாத்தியப்படும்.

தீராநதி: அப்போது அரசின் குரல் தானே நமது கல்வித் திட்டத்திலும் பிரதிபலிக்கும்?

எம்.டி.முத்துக்குமாரசாமி: சந்தேகமே இல்லை. அரசின் குரலாகத்தான் அது பிரதிபலிக்கும். ஆக, அரசியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவு என்பது நிராகரிக்கப்பட வேண்டியதுதான் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அரசியல் ரீதியான பார்வை இல்லாமல் யாருக்குமே வாசிப்பு என்பது சாத்தியமாவதில்லை என்றும் சொல்வேன். ஒவ்வொரு காலகட்டமும் அதற்கான இலக்கிய பனுவல்களையும், விமர்சன பார்வைகளையும் அது தானாகவே தேர்தெடுத்துக்கொள்ளவே செய்கிறது. இது மனித சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

தீராநதி: அரசியல் தன்மையற்ற ஓர் எழுத்து என்பது அப்போது சாத்தியமில்லையா?

எம்.டி.முத்துக்குமாரசாமி: சாத்தியமில்லை என்று தான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளன் என்ன செய்யலாம் எனப் பார்த்தீர்கள் என்றால், தன்னுடைய அரசியலைப் பற்றிய ஒரு நினைவுப் பூர்வமான பிரக்ஞை இல்லாமல் எழுதக்கூடிய ஆளாக இருக்கலாம். ஆனால், வாசிப்பவனும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லையே. ஆக, எல்லா இலக்கியமும் ஏதோ ஒரு அரசியலை முன்மொழியக் கூடியதாகவும் ஏதோ ஓர் அரசியலை அதில் பார்க்கக் கூடியதாகவுமே இருக்கிறது. ஓர் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான ஊடாட்டம் அப்படித்தான் நிகழமுடியும்.

தீராநதி: அப்போது திராவிட அரசியல் நமது வாசிப்பில் நிகழ்த்திய நன்மை தீமைகள் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா?

எம்.டி.முத்துக்குமாரசாமி: முழுமையான நன்மைகள், முழுமையான தீமைகள் என்று எதையும் நாம் பொதுவாகப் பிரித்துச் சொல்ல முடியாது. இரண்டும் கலந்துக்கட்டிதான் எல்லாம் இங்கு நடந்துக்கொண்டிருக்கிறது. திராவிட அரசியலின் முக்கியமான கொடை என்ன என்று பார்த்தோமேயானால் சங்க இலக்கியத்தை வாசிக்க வைத்தது. கல்வி மட்டங்களிலும், ஆசிரியர்கள் மட்டத்திலும் திராவிட அரசியலின் தாக்கம் இல்லாதிருக்குமேயானால் சங்க இலக்கியமும் சரி, பழந்தமிழ் இலக்கியமும் சரி இந்த அளவுக்கு வாசிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

தீராநதி: அதற்கு முன்பாக கூட பாரதம் படிப்பது மாணவர்கள் தேவாரம் ஓதுவது, நமது வீட்டு சுக துக்க நிகழ்ச்சிகளில் திருவாசகம் படிப்பது என்ற நெடிய மரபு நமக்கு இருந்திருக்கத்தானே செய்கிறது?

எம்.டி.முத்துக்குமாரசாமி: இப்போதும் அப்படித்தானே இருக்கிறோம். அதில் எந்தவித பெரும் மாற்றமும் நடந்துவிடவில்லையே. சங்க இலக்கியத்திற்கான வாசிப்பு முறைகளே பலவிதமானதாக இருக்கிறதே. சங்க இலக்கியத்தை வாய்மொழி மரபு இலக்கியத்தின் நீட்சியாக கைலாசபதி சொல்கிறார். செவ்வியல் மரபு என்று திராவிட அரசியலின் வாசிப்பு முறைகள் சொல்கின்றன. நான் என்ன சொல்கிறேன் என்றால், நம்முடைய பழந்தமிழ் இலக்கியத்தை, சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கும், அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டாவதற்கும் திராவிட அரசியல் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்கிறேன். அதே சமயத்தில் நவீன இலக்கியம் படிப்பதற்கு திராவிட அரசியல் பெரும் தடையையும் ஏற்படுத்தி இருக்கிறது. புதுமைப் பித்தனுக்கும், மௌனிக்கும் எழுத்தாளர் அங்கீகாரம் கேட்டு இவர்களிடம் போராட வேண்டிதான் இருந்தது. அவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுத் தளத்தில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கே நம்மவர்கள் எவ்வளவு போராடி இருக்கிறார்கள்! திராவிட அரசியலின் வாசிப்பு முறை பொதுத் தளத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக மாறி இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரு புறம் நன்மை நடந்தது என்று வைத்துக் கொண்டால், இன்னொரு பக்கம் பெரிய தீமையும் அதன் கூடவே சேர்ந்து வருகிறது. இதுதான் நன்மை இதுதான் தீமை என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாமல் இருக்கிறது.

தீராநதி: நீங்கள் இயங்கிய 85 முதல் 95 வரையிலான காலகட்டம் என்பது அறிவை நேசிக்கக் கூடிய ஒரு சமூகமாக இருந்ததென்றும், அது இன்று காலவதியாகி வருகிறதென்றும் சிலர் முன் மொழிகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள் நீங்கள்? இது எந்த அளவுக்கு உண்மை?

எம்.டி.முத்துக்குமாரசாமி: இன்று அறிவு என்பது என்ன என்பதற்கான அளவீடுகள் மாறிவிட்டன என்றுதான் நான் சொல்வேன். அறிவை நேசிக்கின்றது, அறிவினுடைய வெளிப்பாடுகளை நேசிக்கின்றது என்பது மனித இயல்புகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொருவரும் வேறுவேறான அறிவை நேசிக்கிறார்கள். தத்துவ அறிவு, இலக்கிய பனுவல்கள் பற்றி அறிவை நேசிக்கும் தன்மையை வேண்டுமானால் முழுமையாக இன்று இழந்துவிட்டோம் என்று சொல்லலாம். ஆனால் வேறு விதமான அறிவுகளின் வளர்ச்சி என்பது சாத்தியமாகிதான் இருக்கிறது. சாப்ட்வேர் டெவலப்மெண்ட்டின் அடிப்படை என்ன? ‘லாஜிக்’கை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். கணிதயியல் ரொம்பத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். லாஜிக்கும், கணித இயலும் இல்லாமல் இவ்வளவு பெரிய ‘சாப்ட்வேர் வளர்ச்சி’ என்பது நடந்திருக்கவே முடியாது. இன்றைக்கு இந்தியாதானே சாப்ட்வேர் துறையில் வளர்ச்சி பெற்ற நாடாக இருக்கிறது.

தீராநதி: நவீன இலக்கிய வெளிக்குள் இயங்கி வந்த நீங்கள் ‘தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம்’ என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி செயல்பட ஆரம்பித்துவிட்டீர்கள். திஷீறீளீறீஷீக்ஷீமீ சம்மந்தமாக உங்களின் நிறுவனம் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது?

எம்.டி.முத்துகுமாரசாமி: நவீன இலயக்கியத்திற்கு திஷீறீளீறீஷீக்ஷீமீ எதிரானதல்ல; இவை இரண்டுக்குமான உறவு இலக்கியத்தில் எப்படித் தெரியவருகிறது என்பதைப் பற்றியும் எனக்குள்ள பிரத்யேக உறவு என்ன என்பதையும் ஏற்கெனவே பேசினோம். இந்திய அளவில் உள்ள நாட்டுப்புறக் கலைகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவே இந்த நிறுவனத்தை முதலில் ஆரம்பித்தேன். நாட்டுபுறக் கலைகளின் வசீகரத்தில் நான் தொடர்ந்து மயங்கித்தான் கிடக்கிறேன் என்று சொல்வேன். ஆதி பழங்குடியினரின் புல்லாங்குழல் ஓசையாகட்டும், அல்லது ஒரு ராஜஸ்தான் பாலைவனத்தில் வாசிக்கப்படக்கூடிய ‘சாரங்கி, இசையாகட்டும் அந்த வசீகரத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை. முதலில் இவையாவும் என் படைப்பியக்கத்திற்கு உதவியாக இருக்கும் என்று எண்ணித்தான் இதனுள் போனேன். ஆனால், இது ஒரு பெரிய மாயச்சுழல். இது நம்மை அப்படியே உள்ளிழுத்துக் கொள்ளும் என்று ஒருபோதும் நினைக்கவே இல்லை. இவ்வளவு வளங்களை உள்ளடக்கிய நமது நாட்டுப்புறக்கலைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதிலும், அது தொடர்பான புத்தகங்கள், ஆவணப்படுத்துதல், கலை பாரம்பரியத்தை வளர்ப்பதற்காக பொருளாதார உதவிகள் செய்வதிலும் எங்களின் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுபோல உலகெங்கிலும் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றைப் போலவே நாங்களும் செயல்படுகிறோம்.

தீராநதி: சமீபத்தில் ‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நாட்டுப்புறக் கலையை மேம்படுத்துவதிலும் இந்திய அளவிலான நாட்டுப்புறக் கலைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதிலும் உங்களின் நிறுவனத்திற்குப் பெரும் பங்கு இருக்கிறது. இருந்தும் தமிழகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் நீங்களும் சரி, உங்களின் நிறுவனமும் சரி பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு முன்பு உங்கள் நிறுவனத்தின் சார்பாக 2002_ல் இதே மாதிரியான கலாச்சார நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினீர்கள். அதற்கு உலகெங்கிலும் இருந்து பல பெரும் ஆளுமைகள் வரவேற்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார்கள். சரியான விளம்பரம், அரசின் ஒத்துழைப்புகள் இல்லாததால் அந்நிகழ்ச்சி சோபிக்கவில்லை. சென்னை சங்கமத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எம்.டி.முத்துகுமாரசாமி: நாங்கள் நடத்தின விழாவையும், அவர்கள் நடத்திய விழாவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது சரியானதல்ல; 2002_ல் நாங்கள் அந்த விழாவை ஏற்பாடு செய்யும்போதே அகில இந்திய நாட்டுப்புறக் கலை விழாவாகத் தான் அதை வடிவமைத்திருந்தோம். ஓர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் விழாவாகவே இதை நாங்கள் ஒருங்கிணைத்தோம். முதலில் ஒவ்வொரு வடிவமாக ஆய்வு செய்து அவற்றைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சேகரித்து, சிறு புத்தகமாக வெளியிட்டு, அதற்கான புகைப்படக் கண்காட்சிகளை வைத்து, அதைப்பற்றிய வகுப்புகள் நடத்தி, அந்தந்த நாட்டுப்புற வடிவங்களைப்பற்றிய ஒரு முழுமையான புரிதலை மக்களுக்குக் கொடுத்தோம். இப்போது 2007_ல் நடத்தப்பட்ட ‘சென்னை சங்கமம்’ விழா அளவிற்கு அதற்கு கூட்டம் இல்லை என்றாலும் கூட, எங்களின் நிகழ்ச்சி மக்களிடத்தில் பல்வேறு விதமான நாட்டுப்புறக் கலை சம்மந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது என்று தான் நான் சொல்வேன்.

சங்கமம் விழாவை இவர்கள் பெரிய முயற்சி எடுத்து செய்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி இருக்கிறது. நாட்டுப்புற கலைகளை வளர்க்க இப்படியான நிகழ்ச்சிகள், விழாக்கள் யாராவது நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடும் ஆனால் இதில் சில காரியங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

தெருக்கூத்தை அது நடத்தப்படுகின்ற சூழலில் சென்று பார்த்தீர்கள் என்றால், அது ஒரு சடங்காகவும், நாடகமாகவும், கலை வடிவமாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறது. அதனுடைய அசல் தொடர்புகளிலிருந்து அதை நீங்கள் வெளியில் எடுத்துக் கொண்டு வரும்போது, அதனுடைய இதர சமூகப் பரிமாணங்கள் என்ன என்பது மக்களுக்குத் தெரியாமல் போய் விடலாம். அந்தச் சமூக பரிமாணங்கள் என்ன என்பதை எடுத்துச் சொல்வதற்கான ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படி பண்ணவில்லையென்றால், அதன் அசல் வடிவம் என்ன என்பது மக்களுக்குப் புரியாமல் போய்விடும். இதனால் பார்வையாளன் அதைப்பற்றிய சரியான பார்வையைப் பெறமுடியாதவனாக மாறி விடுகிறான்.

இதை வெளிப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையாக நான் பார்க்கிறேன். சில வடிவங்களுக்கு சமூக ரீதியாக சில விமர்சனங்களை நாம் வைக்க வேண்டும். உதாரணமாக தோல் கருவிகள் நம்முடைய ‘தலித்’களிடம் தான் இருக்கிறது. அவர்கள்தான் அதை உருவாக்கினார்கள். அவர்கள் உருவாக்கிய பிறகு அவை கோயில்களுக்குள் சென்று உட்கார்ந்து விட்டன. இதனால்தான் தாங்கள் செய்த கருவியை தாங்களே வாசிக்க முடியாத நிலைமை வந்துவிட்டது.

தஞ்சை மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் தலித்துக்கள் கூடி ‘நாங்கள் இனி தண்டோராக்கள் போடமாட்டோம்’ என்றார்கள். தண்டோராக்களை தலித்துக்களின் அடையாளமாக நீங்கள் சொல்வதினால் அதை ஒரு அவமானத்தின் வரலாறாக எங்கள் மீது திணிப்பதினால் இனி நாங்கள் வாசிக்க மாட்டோம் என்று தலித் கலைஞர்கள் முடிவு செய்தார்கள். தலித் இயக்கங்களுக்குள்ளாகவே இதைப் பற்றிய இருவிதமான கருத்துக்கள் அதன் பிறகு ஏற்பட்டது.

ஒன்று: அதை நம்முடைய அடையாளமாக எடுத்துக் கொண்டாலும், அவற்றை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்கள். இரண்டு: இல்லை. இது நம்முடைய அவமானத்தினுடைய வரலாறு. இவர்கள் எல்லாம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தக் காலத்தில் நிர்ப்பந்தமாக நாம் இதை வாசித்துக் கொண்டிருந்தோம். அதனால் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வேறு அடையாளங்களைத் தேட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

பொதுத்தளத்தில் இந்த வடிவங்களை எல்லாம் கொண்டு வந்து நிகழ்த்திக் காட்டும்போது, இந்த எதிர்ப்பின் வரலாற்றையெல்லாம் சேர்த்து நிகழ்த்திக் காட்ட வேண்டும். இப்படிச் செய்து காட்டவில்லையென்றால் மறுபடியும் நீங்கள் மகாராஜா, மகாராணிகளாக உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஆடுவார்கள், நாங்கள் பொழுதுபோக்காக கண்டுக்களித்துக் கொண்டிருப்போம் என்றாகி விடுகிறது.

ஒரு வடிவத்தை பொதுத்தளத்திற்குக் கொண்டு வரும்போது இவற்றையெல்லாம் சேர்த்து சொல்லும்போதுதான் நீங்கள் அந்த வடிவத்திற்கும் கலைக்கும் தொண்டு செய்பவர்களாகிறீர்கள்.

தீராநதி: வாய்மொழி கதையாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், இசை, கூத்து, நாடகங்கள் கலாச்சாரங்கள் இவற்றை மேம்படுத்த, அழிவிலிருந்து மீட்டெடுக்க ழிதிஷிசி போன்ற அமைப்புகள் போராடியும், உதவியும் வருகின்றன. கலாச்சார ரீதியான தொன்மங்களைப் பாதுகாக்க நினைக்கும் எந்த அமைப்புகளும் நாட்டுப்புறக் கலை வடிவ ரீதியான தொழில்களைப் பாதுகாப்பதில் எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. தொழில் ரீதியான நாட்டுப்புற வகைமைகளும் திஷீறீளீறீஷீக்ஷீமீ க்குள் வருபவனதாமே? தொழில் ரீதியான திஷீறீளீ றீஷீக்ஷீமீ ரை உங்களைப்போல அமைப்புகள் எப்படி காப்பாற்ற போகின்றன?

எம்.டி.முத்துக்குமாரசாமி: சுதந்திரம் பெற்ற இந்தியாவில் மிக அதிகமான முக்கியத்துவம் பெற்ற துறை என்ன என்று பார்த்தீர்கள் என்றால் தொழில் சார்ந்த கைவினைகள்தான். ‘காந்தி கிராம உத்யோக பவன்’ ‘காதிகிராஃப்ட்’ இதுமாதிரியான காந்திய நிறுவனங்கள் அதைத்தான் மையப்படுத்தி செயல்படுகின்றன. கோ_ஆப்டெக்ஸ், பொருளாதார முன்னேற்றம் சார்ந்த சுயத்தொழில்கள், நுகர்வோருக்கான அங்காடிகள் எல்லாமே அதை மையப்படுத்தியே செயல்படுகின்றன. உலக அளவில் வேறு எங்கேயும் இவ்வளவு அதிகப்படியான கைவினை சம்மந்தமான தொழில்களை முன்னேற்றுவதற்கான களங்கள் இல்லை. ஆனால், இவர்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்களா? இவர்களை விளிம்பு நிலையிலிருந்து காப்பாற்றுவதற்காக செயல்படுகிறார்களா என்பது வேறு கேள்வி. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொழில்சார்ந்த நாட்டுபுறக் கலைகளைக் காப்பாற்ற முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது நாங்கள் எப்படி இதிலிருந்து வேறுபட்டு செயல்பட முடியும், உதவிகள் செய்ய முடியும் என்று யோசித்ததன் விளைவாக சிலவகைத் தொழிற்சார் கலைகளையே நாங்கள் வளர்த்தெடுக்க முயற்சி செய்கிறோம்.

இன்று திஷீறீளீறீஷீக்ஷீமீ சம்பந்தமான இசைக் கருவிகளைச் செய்பவர்கள் அதிகப்படியாக யாரும் இல்லை. வீணை செய்பவர்கள் கூட தமிழ்நாட்டில் ரொம்ப மோசமான நிலையில்தான் வாழ்கிறார்கள். வீணை செய்பவர்கள் மட்டுமல்ல; நாதஸ்சுரம் செய்பவர்களின் வாழ்க்கை நிலையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழ்நாட்டில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாதஸ்சுரம் இல்லாமல் நமது கலாச்சாரத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடக்குமா? ஒரு சாமி புறப்பாடு நடக்குமா? கலாச்சார ரீதியாக நமது சமூகத்தில் முக்கியமானதாக கருதுகின்ற இசைக் கருவிகளை செய்வதற்கான வழிமுறைகள் இங்கு இல்லை. இதற்காகதான் இதில் இருந்து கொண்டு இவற்றை மேம்படுத்த போராடிக் கொண்டிருக்கிறோம்.

தீராநதி: காந்தி இவற்றையெல்லாம் சுதேசி மனப்பான்மை அரசியலுக்காக ஊக்குவித்தார். காந்திக்குப் பிறகு அரசியல் ரீதியாக இதை ஒரு இயக்கமாக வார்த்தெடுக்காமல் நமது அரசியல் தலைவர்கள் கை நழுவ விட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது. சுதந்திரத்திற்குப் பின்பாக இது போன்ற கலைகளை ஒரு கல்வியாக பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் யாரும் இதைச் செய்யவில்லை? இது பற்றிப் பேசுங்கள்?

எம்.டி.முத்துக்குமாரசாமி: காந்திய நிறுவனங்கள் எண்ணிக்கையில் ஜாஸ்தி. அதனுடைய செயல்பாட்டு முறையில் எனக்கு சில வேறு அபிப்பிராயங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒரு தனிப்பட்ட கலைஞனுடைய படைப்பாற்றலை அவை கொண்டாடத் தவறி விட்டன என்று தான் நான் சொல்வேன். ஒரு நல்ல சேலையை நெய்தவனுடைய பெயர் என்ன என்பது நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. நல்ல பிரமாதமான ஒரு கைவினை பொருளைச் செய்தவனின் பெயர் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. தேரை வடித்தவனின் பெயர் என்ன என்பது தெரியவில்லை. இந்த மாதிரியான ஆபத்துக்கள் நிறைய வரும் வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் உண்டாக்கி விட்டு இருக்கின்றன. இந்த ஆள் இந்த மாதிரி ஒரு மரபில் இதைச் செய்ததினால் இந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டு இன்று இந்த மாதிரி இந்த மரபுகள் இருக்கின்றன என்ற நாம் கொண்டாடினால்தான் அந்த மரபை நாம் பேணுகிறோம் என்று பொருள்.

ஒவ்வொரு மரபின் கண்ணியாக இருக்கக் கூடிய அந்த தனி நபர் யார் என்பது அடையாளப்படுத்தப்படாமல் போனதால்தான் இன்றைக்கு இவ்வளவு மோசமான சூழலில் நாம் மாட்டித் தவிக்கின்றோம்.

தீராநதி: சரி, படைப்புகளுக்குள் வருவோம். தொடர்ந்து உங்களின் படைப்புகளில் வடிவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள். பனுவலை இரண்டாவது பட்சத்தில் தான் அணுகுகிறீர்கள்? உங்களைப் பொறுத்த அளவில் ஒரு படைப்பிற்கு வடிவம் என்பது எவ்வளவு முக்கியம்?

எம்.டி.முத்துகுமாரசாமி: வடிவம் என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பார்த்தீர்கள் என்றால், ஒரு ஒட்டுமொத்த வடிவங்களாக மட்டுமல்ல; அதை ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாக இருந்தாலும் சரி, ஒரு சொற்கோர்வையினுடைய வடிவமாக இருந்தாலும் சரி, ஒரு முழு படைப்பினுடைய வடிவமாக இருந்தாலும் சரி அந்த வடிவம் என்பது ரொம்ப முக்கியமானது என்பேன். தொடர்ந்து நான் வடிவங்களால்தான் வசீகரிக்கப்படுகிறேன். தொடர்ந்து என் எழுத்து புதிய வடிவங்களை உருவாக்குவது என்ற சிந்தனையிலேதான் இருந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்னுடைய மனோநிலைக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்திற்குமான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை முன்பே சொல்லி இருக்கிறேன். மொழி அளவில் இரண்டுவிதமான உரையாடல் இங்கு இருந்தது. கோணங்கி, நாகார்ஜுனன், தமிழவன் (தமிழவனின் இன்றைய கருத்தியல் என்னவாக இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.) போன்றவர்கள் அன்றைக்கு என்ன நினைத்தார்கள் என்றால் வாக்கிய வடிவங்கள் நேரடியானதாக இல்லாமல் அது சிதையும் போதுதான் ஒரு கவிதைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகிறது என்று கருதினார்கள்.

இதனால் புரியாமலே போய்விடக் கூடிய எழுத்து உருவாகிற ஆபத்து அதில் இருந்தாலும் கூட, அந்த ஆபத்தை எதிர்கொண்டு பயணிக்கலாம் அதுதான் உண்மையான இலக்கியம் என்றும் சொன்னார்கள். இதற்கெல்லாம் தியரிட்டிக்கலான சப்போர்ட்களும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாகார்ஜுனனிடமிருந்து இது ஆரம்பித்து பிறகு அது கோணங்கியிடம் விரவிவிட்டது என்பது என்னுடைய எண்ணம். அது உண்மையாகக் கூட இருக்கலாம். இதில் என்னுடைய கருத்து என்னவென்றால், வாக்கிய அளவில் செய்யக்கூடிய சிதைவு இருக்குகிறதே அது ஓர் அளவுக்குத்தான் உண்மையாக இருக்க முடியும். அது கவிதையினுடைய வடிவத்திற்கு மட்டுமே சரியானது. சிறுகதைக்கோ, நாவலுக்கோ அது சரியானதல்ல என்ற முடிவுக்கு நான் இரண்டு மூன்று கதைகள் எழுதிப் பார்த்தவுடனேயே வந்து விட்டேன். முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதின கதைகள். வாக்கியங்களை சிதைத்தெழுதின கதைகள் என்று நனவோடை உத்தியிலிருந்து நகர்ந்து வந்து விட்டேன். நகர்ந்து வந்த பிறகு ஒரு இலக்கிய வகைமையின் வடிவத்தில் செய்யப்படுகின்ற பரிசோதனைகள், அதை எப்படி படைப்பு ரீதியாக எடுத்துக் கொண்டு மேலே போக முடியும் என்பது முக்கியமல்ல; அதன் தன்மைகள்தான் முக்கியமானது என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன். இது இலக்கிய ரீதியாக மட்டும் முக்கியமானது என்று சொல்ல மாட்டேன். சிந்தனை பூர்வமாக, பார்க்கும் முறைகளை மாற்றுவதுதான் ஒரு கலைக்கான இயக்கமே இருக்கிறது என்பேன்.

தீராநதி: ஆட்டோமெட்டிக் ரைட்டிங் என்பது சர்ரியலிஸத்தில் வரக்கூடிய ஒரு கூறு. இதைத்தான் கோணங்கி முயன்று பார்க்கிறார். ஒரு படைப்பிற்கு திணீஸீtணீsஹ் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஒரு விஷனும் முக்கியமில்லையா? திணீஸீtணீsஹ் பற்றி பேசக்கூடிய யாருமே விஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரியவில்லையே?

எம்.டி.முத்துகுமாரசாமி: ‘மதனிமார் கதைகள்’ எழுதின கோணங்கிக்கும் ‘பிதிரா’ கோணங்கிக்கும் இடையில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கோணங்கியின் ‘மதனிமார் கதைகளு’க்குப் பிறகு வந்த அவரது எழுத்துக்களில் பழைய எதார்த்த வகையான எழுத்துகள் என்பது இல்லை. ஆட்டோமெட்டிக் ரைட்டிங் என்று அவரது எழுத்தைச் சொல்ல முடியாது. அவருக்கு ஒரு தீர்மானமான பார்வை இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றி ரொம்பத் தீவிரமாக படித்து, எழுதி, சிந்தனை செய்து எழுதக் கூடிய ஓர் இடத்துக்கு, ரொம்ப மேலோட்டமாக அந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு கவர்ச்சிகரமான வாக்கியத்தை அமைப்பதன் மூலமாக கோணங்கியால் அந்த விஷயத்தைச் சொல்லிவிட முடியும். இது கோணங்கியின் பலம். ஆனால் இது எப்படி நடக்கிறது என்று பார்த்தால் அகஸ்மாத்தமாகத்தான் நடக்கிறது. பத்து பக்கங்கள் படித்தீர்கள் என்றால் ஒரு வரியில் அது நடக்கிறது. அதனால் அது ஆட்டோமெட்டிக் ரைட்டிங் மாதிரி தெரிகிறதே தவிர, அது ஆட்டோமெட்டிக் ரைட்டிங் கிடையாது. கோணங்கியின் ஒட்டுமொத்த படைப்பில் ஒரு விஷன் இருக்கிறது. இந்த மொழி ரீதியான பரிசோதனையில் அவர் ஏகப்பட்ட ஆபத்துகளில் சிக்கிக் கொண்டதினால் யாராலும் அவரை அணுக முடியாத பனுவல்களாக அவரது எழுத்து மாறிவிட்டது எனலாம். அது ஒரு துயரமான விஷயம்தான்.

அவருடைய படைப்புக்களை யாரும் வாசிக்க முடியாமல் இருக்கிறது என்று கேள்விப்படும்போது நான் விசனம் தான் அடைகிறேன்.

தீராநதி: போர்ஹே கூட ஒரு நேர்காணலில் ‘என்னுடைய படைப்பை நான் புரியாத மொழியில் எழுதி மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேனோ’ என்று விசனமடைகிறார். இந்த மாதிரியான கவலைகள் ஒரு படைப்பாளிக்கு ஏன் எழுகிறது? இதை என்னவென்று புரிந்து கொள்வது?

எம்.டி.முத்துக்குமாரசாமி: போர்ஹேவை இந்த தொடர்புகளுக்குள் இழுப்பது தவறானது என்று நினைக்கிறேன். அவர் எழுதினதே ரொம்பவும் குறைச்சலானதுதான். அவர் நிறைய எழுதாமல் பேசியே வீணடிச்சது தான் நடந்தது. இருந்தாலும் 24, 25 சிறுகதைகளை எழுதியவரை, ரொம்பவும் குறைச்சலான கவிதைகளை எழுதினவரை இன்று நாம் கொண்டாடிக் கொண்டுதானே இருக்கிறோம். பெரிய பெரிய நாவல்கள் எழுதின ஓர் இலக்கிய ஆசிரியருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதைகள் போர்ஹேவுக்கும் உலக அளவில் கிடைத்துதானே இருக்கிறது. அவர் விசனப்பட்டிருக்கிறார் என்றால், அது முதுமையின் வெளிப்பாடு அவ்வளவுதான்.

தீராநதி: உங்களுடைய கதைகளில் கூட நடுநடுவில் வெற்றிடங்களை உருவாக்குவது, வேறு மாதிரி பரிசோதனைகள் பண்ணுவது என்று முயன்று பார்த்திருக்கிறீர்கள். ‘டென்த் ரஸா’வில் இன்டியன் ஆந்தாலேஜி ஆஃப் நான்சென்ஸ் லிட்ரேச்சர் என்ற புத்தகத்தில் கூட தமிழில் முக்கியமானதாக உங்களின் படைப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நான்சென்ஸ் லிட்ரேச்சர் (ழிஷீஸீsமீஸீsமீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) பற்றி விளக்குங்களேன்?

எம்.டி.முத்துகுமாரசாமி: தமிழில் நான் ‘மர்ம நாவல்’ என்று எழுதின ஒரு கதையை அந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர அது ஒரு பெரிய விஷயமில்லை. அறிவு இல்லாமல் மொழியில் எப்படி வேலை செய்வது என்பது பெரிய சவால். ஏனென்றால் நீங்கள் இரண்டு வார்த்தைகள் சேர்த்தீர்களென்றால் அதற்கு ஏதாவது ஓர் அர்த்தம் வந்து விடுகிறது. ழிஷீஸீsமீஸீsமீ வீs னீஷீக்ஷீமீ sமீக்ஷீவீஷீus tலீமீஸீ sமீஸீsமீ.

தீராநதி: ஒரு காலகட்டத்தில் படுதீவிரமாக இயங்கி வந்த நீங்கள், திடீரென்று பெரிய இடைவெளியை விட்டு விட்டீர்கள். சமகாலமாக வரும் படைப்புகளை வாசிக்கிறீர்களா?

எம்.டி.முத்துகுமாரசாமி: எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எழுதுவதையும், படிப்பதையும் நான் நிறுத்தவே இல்லை. தமிழில் எழுதாமல் இருக்கிறேனே தவிர, ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த பத்து வருடங்களில் நிறைய படைப்புகள் வந்திருக்கின்றன. அன்றைக்கு என்னுடன் முதல் தொகுதி மட்டுமே வெளியிட்டிருந்தவர்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பிரேம்_ரமேஷ், கோணங்கி, சாருநிவேதிதா, போன்ற பலரும் இன்று பல நாவல்களின் ஆசிரியர்களாக மாறிவிட்டார்கள். இன்று புதியதாக நிறைய எழுத்தாளர்கள் எழுத வந்திருக்கிறார்கள்.

இந்தப் பத்து வருடங்களில் என்ன ஆகி இருக்கிறது என்று பார்த்தோமேயானால் பொதுவான ஒரு ஜிக்ஷீமீஸீபீ என்பதில்லை. தனிப்பட்ட படைப்பாளிகளைப்பற்றி, அவர்களுடைய படைப்புகளைப்பற்றிச் சொல்லக்கூடிய ஒரு நிலைதான் இருக்கின்றதே தவிர, ஒரு சிந்தனை முறை என்பதோ tக்ஷீமீஸீபீ என்பதோ இன்று இல்லை. முழுவதும் எதிரான இரு வேறு படைப்புகள் ஒரே சமயத்தில் வெளி வருகிறது. ரொம்ப அரதப் பழசான ஒரு விஷயத்தைக் கொண்டாடக் கூடிய ஒரு எழுத்தும், முற்றிலும் புதியதாக எழுதக்கூடிய ஒரு எழுத்தும் ஒரே பத்திரிகையில் வெவ்வேறு பக்கங்களில் வெளி வருகிறது.

95லிருந்து 2005 வரையான நவீன தமிழிலக்கிய காலகட்டம் இருக்கிறது பாருங்கள், அது ரொம்பவும் குழம்பிய காலகட்டம் என்று நான் சொல்வேன். முன்பெல்லாம் பத்து பத்து வருடமாக ‘காவ்யா’ பதிப்பகம் 70_களில் தமிழிலக்கியம். 80_களில் தமிழிலக்கியம் என்று ஒவ்வொரு காலத்தையும் வகுத்து ஆய்வு செய்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. இன்று இதைப்போல ஒரு கணிப்பு என்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இதையெல்லாம் வைத்து 70களின் tக்ஷீமீஸீபீஎன்ன? 80களின் tக்ஷீமீஸீபீ என்ன? என்றெல்லாம் நம்மால் அனுமானிக்க முடிந்தது. கவிதையில் அனுமானிக்க முடிந்தது, நாவலில் அனுமானிக்க முடிந்தது. நாடகத்தில், விமர்சனத்தில் எல்லாம் அனுமானிக்க முடிந்தது. ஆனால் பின்னால் வந்த பத்து வருடங்களில் ஒரு இலக்கில்லாத, அனுமானம் இல்லாத போக்கு நிலவுவதாக நான் நினைக்கிறேன்.

தீராநதி: அப்போது இலக்கியத்துறைக்கு ஜிக்ஷீமீஸீபீ என்பது முக்கியமானது என்று நினைக்கிறீர்களா?

எம்.டி.முத்துகுமாரசாமி: அப்படி நான் நினைக்கவில்லை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் ஒரு மொழி இலக்கிய வரலாறு என்று நாளைய வரலாற்று ஆசிரியர்கள் கணித்து பார்க்கும் போது ஒவ்வொரு காலகட்டத்தினுடைய இலக்கியம் எப்படி இருந்தது என்பதை அனுமானிப்பார்கள் இல்லையா அது ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறேன்.

இலக்கியம் என்பது தனிமனித சார்ந்த வெளிப்பாடாக இருந்தாலும் அது ஒரு வரலாற்று கால கட்டத்தினுடைய வெளிப்பாடாகவும் இருக்கிறது. அந்த வரலாற்று காலகட்டத்தினுடைய வெளிப்பாடாக அது இருக்கும் போதுதான் ஒரு சமூகத்தின் பதற்றத்தின் மையமாக அது மாறுகிறது. அப்படி பதற்றத்தின் மையத்தையே கண்டுபிடிக்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நூறுபேர் எழுதுகின்றவர்களிடம் அந்தக் காலத்தின் தாக்கமே இல்லை என்று வைத்துக் கொண்டால் எங்கோ தவறு நடக்கிறது என்றுதான் அர்த்தம்.

தீராநதி: இதையட்டிய இன்னொரு கேள்வி எனக்கெழுகிறது. ஒரு படைப்பாளின் படைப்பை மட்டுமே பார்க்க வேண்டும். அவனின் சொந்த வாழ்க்கையில் அவன் எப்படி இருக்கிறான் என்பது தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ றிஷீறீவீtவீநீணீறீறீஹ் சிஷீக்ஷீக்ஷீuஜீtமீபீ ஷிtணீtமீனீமீஸீt போல தெரிகிறதே?

எம்.டி.முத்துகுமாரசாமி: ஓர் எழுத்தாளனுடைய வாழ்க்கையை படைப்பில் பார்க்கக்கூடாது என்பது அறம் சார்ந்த பார்வை. அது சிஷீக்ஷீக்ஷீuஜீtவீஷீஸீ இல்லை. சொந்த வாழ்க்கையைக் காட்டி அவனது படைப்பின் மதிப்பை நீங்கள் இறக்கிவிட முடியும். படைப்பு மனோ நிலையில் கூடிய மனோநிலை இருக்கிறதே அது தினசரி மனோ நிலை அல்ல; இது எழுதக்கூடிய எல்லா ஆட்களுக்கும் தெரியக்கூடிய ஒன்றுதான்.

தீராநதி: அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனம், பின் நவீனம் என்று விவாதிக்கின்ற இன்றைய காலத்திலேயே அதை கடுமையாகச் சாடுகின்றவர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கோட்பாடுகள் எல்லாம் என்றோ மேலை நாடுகளில் செத்துப் போன ஒன்று, அதைத் தூக்கிக் கொண்டு இவர்கள் திரிகிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கோட்பாடுகள் எல்லாம் செத்துப் போனவைகளா? ஆனால் டெரிபிலினையெல்லாம் நாம் படித்த பிறகுதான் ஒரு பிரதியை எப்படி கட்டுடைத்து வாசிக்க முடியும் என்பதையெல்லாம் தெரிந்துக் கொண்டிருக்கிறோம்?

எம்.டி.முத்துகுமாரசாமி: எப்போதோ செத்துப்போன ஒன்று எப்படி போஸ்ட் மார்டனிஸமாக இருக்க முடியும்? நவீனம், பின் நவீனம் என்று சொன்னாலே அது இன்றைக்கு இருக்கக் கூடிய சமகால விஷயங்களைக் குறிக்க கூடியதாகத்தானே இருக்கிறது? இது மேலை சிந்தனை, இது நம்முடைய கீழை சிந்தனை என்பதற்கெல்லாம் இனி எந்த மதிப்புகளும் இருப்பதைப் போல எனக்குத் தெரியவில்லை.

தீராநதி: அன்றைய காலகட்டத்தில் உங்களுக்கும் கவிஞர் பிரம்மராஜனுக்கும் கவிதை தொடர்பாக சில விமர்சனங்கள் இருந்தது. இன்றைக்கு நீங்கள் பிரம்மராஜனின் கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எம்.டி.முத்துகுமாரசாமி: ‘இனி’யில் ஒரு கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய விமர்சனத்திற்கு பிரம்மராஜன் எதிர்வினை செய்தார். நான் அதற்குப் பதில் எழுதினேன். அவர் எழுதிய ‘கடல் பற்றி கவிதைகள்’ இருக்கிறதே அது நான் தமிழில் ரொம்ப ரசித்துப் படித்த கவிதைத் தொகுதிகளில் ஒன்று.
பிரம்மராஜனைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ‘மீட்சி’ பத்திரிகையில் ‘எதிர்கவிதை’ என்ற ஒன்றை அவர் உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆத்மாநாமை அதற்கு முன்னோடியாகவும் அதன் தொடர்ச்சியாக அவர் தன்னையும் முன்வைத்தார். அப்போது எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் இவர்களின் தாக்கம் நிறைந்த கவிதைகளை அவர் எழுதிக் கொண்டிருந்தார். அதில் எஸ்ரா பவுண்டின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததாக நான் நினைக்கிறேன். அந்தக் குறிப்பிட்ட கவிதைகளை அணுக்கமாக என்னால் நினைக்க முடியவில்லை. அதில் வரும் வாக்கிய அமைப்புகள், பதங்கள், சொல்லப்படுகின்ற குறிப்புகள் எல்லாம் செய்யப்பட்டவையாக என் மனதிற்குப்பட்டது. இதை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். அவற்றை முழுவதுமாக மீண்டும் வாசித்துவிட்டு நான் இதைச் சொல்லவில்லை.

நான் முன்பு குறிப்பிட்ட ‘கடல் பற்றிய கவிதை’களில் வரும் ‘மகளுக்காக’ கவிதை இருக்கிறதே அது ஒரு அற்புதமான கவிதை என்றே நினைக்கிறேன். 80_களில் பிரேம்_ரமேஷ் கவிதைகளின் மீது எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. இன்று அந்த ஈர்ப்பு, இல்லை. இதுபோல நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் நகுலனுடைய கவிதைகள் எனக்கு எப்போதுமே ஈர்ப்பானதாக இருந்துகொண்டேதான் இருக்கிறது. பிரம்மராஜனைப் பொறுத்தமட்டில் அவர் தமிழின் முக்கியமான கவிஞர் என்று தான் நான் நினைக்கிறேன்.

தீராநதி: நகுலனின் மரணம் சென்ற மாதம்தான் நிகழ்ந்திருக்கிறது. நகுலனைப் பொறுத்தளவில் தன் படைப்புக்குள்ளாகவே அவர் எப்போதே இறந்துவிட்ட ஆள் என்றே தோன்றுகிறது. நகுலனைப் பற்றிக் கூட ஒரு கட்டுரையை நீங்கள் முன்பு எழுதி இருக்கிறீர்கள். நகுலன் படைப்புகள் குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?

எம்.டி.முத்துகுமாரசாமி: தமிழின் முக்கியமான ஓர் எழுத்தாளனாக நகுலனைத்தான் நான் குறிப்பிடுவேன். புதுமைப்பித்தன், மௌனி என்று நாம் வழக்கமாக சொல்லுவோமே அவர்களைவிட முக்கியமான எழுத்தாளர் நகுலன்தான். சுந்தர ராமசாமியைவிட நகுலன்தான் மிக முக்கியமான எழுத்தாளர்.

தமிழில் நவீன இலக்கிய இயக்கம் எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆராய்ந்தால் அது நகுலனிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவரின் முதல் நாவலான ‘நிழல்கள்’ மட்டும்தான் எனக்குப் பிடிக்காது. மற்றபடி அவரின் நாய்கள், நிழல்கள், இன்று, நினைவுப்பாதை, நவீனன் டைரி போன்ற படைப்புகள் பூராவும் மிகப் பிரமாதமானவை. நகுலன் இறந்த செய்தியை நான் கேள்விப்பட்டபோது தமிழில் ஒரு பெரிய சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.

நகுலன் மாதிரியான ஒரு ஆளுமை, நவீன சிந்தனையுள்ள ஒரு சமூகத்தில் இருந்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள். நமது சமூகம் நகுலனுக்கு உண்டான உரிய மரியாதையையும், அந்தஸ்தையும் தரவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு இலக்கியப் படைப்பாளிக்கும் ஒரு வரலாற்று காலகட்டத்திற்கும் இடையில் ஒரு சூட்சமமான ஓர் உறவு இருக்கிறது. அந்த உறவுக்கு யார் அதித விழிப்புடன் இருக்கிறானோ அவன் மிகப் பெரிய கலைஞனாகிறான் என்பது என்னுடைய தீர்மானமான அபிப்ராயம். நகுலனுடைய காலகட்டத்தில் என்ன நடந்தது என்று பார்த்தால், திராவிட இயக்கத்தின் பெரும் எழுச்சி ஏற்படுகிறது. பிராமணர்கள் விளிம்புநிலை மனிதர்களாகிறார். அந்த நினைவுடன் நகுலன் ஒரு பிராமண மனமாகவும், திராவிட இயக்கத்தினால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு மனமாகவும் அப்புறம் காதலில் தோல்வியுற்ற அந்நியமான மனமாகவும் தம்முடைய உறவுகள் என்ன என்று தெரியாத ஒரு மனமாகவும் நகுலனின் எழுத்து மனம் வெளிப்படுகிறது.

அப்போது பைத்தியகார ஓர் மனோநிலை, பன்முகப்பட்ட ஓர் ஆளுமை என்ன எழுத வேண்டும் என்று தெரியாமல் எழுதுவது, கற்பனையான காதலில் வாழ்வது என்றெல்லாம் நடக்கிறது.
திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய வளர்ச்சிக்கும் நகுலன் விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்ட நிலைக்கும் இடையில் இருக்கின்ற உறவைத்தான் நான் நவீனமனம் என்கிறேன். அன்றைக்கு இவருடைய சமகாலத்திய எழுத்தாளர்களிடம் அது இல்லை. அதனால் தான் நகுலனை மேஜர் ரைட்டர் என்கிறேன்.